Tuesday, January 10, 2006

கவி தைத் தேர்



இடம் பிடிக்க வேண்டுமெனில்
வடம்பிடிக்க வாருங்கள்
அரங்கன் தேர் அசைகிறது
ஒப்பனையாய் வைத்தபரி ஒய்யாரப் பாய்ச்சலில்
ஊரெல்லாம் கூடிவந்த ஒத்துழைப்பில்
ஊமையின் உதடசையும்
ஊன்றுவிழி இமையசையும்
ஊர்க்கோடி முக்கினிலே முட்டடித்து
மூங்கில் கழி கெட்டித்து
மூலப்பெரும் பாழை
முக்காலக் கோலடித்து
மூண்ட படைப்பின் மூலச்சுருதி வாங்கி
மூச்சடங்கி பேச்சடங்கி
மூளும் உயிரடங்கி
மேல் வார்த்த தோலின் ஆர்ப்படங்கா
கார்வைதொனி தானசையும்
அடிவயிற்றில் மூச்செடுத்து
அண்டத்தின் வேரை
ஆதிமுதல் அடிபோட்டு
அந்தத்தை முடிபோடும்
அழியாத விதியை ஆர்த்துவரும் தாம்பிழுத்து
குலநீர்மை ஒன்றாகி
கூடியெழும் கோவிந்தா குரல்முழக்கில்
கொட்டும் வேர்வையினில்
குடமுழுக்கு ஆன குலமொன்றாய்
அரங்கன் தேர் அசைகிறது
அவன் கிடந்த மண்ணில்
ஆற்றின் இடைக்குறையில்
ஆய்ச்சிக்கை தாம்பிற்கு
அஞ்சி அச்சுதனார்
ஆயிரவாய் அரவணைப்பில்
அறிதுயிலும் அரங்கத்தில்.......இடம் பிடிக்க.....

(எனது கவிதை நூல் உணர்வின் உயிர்ப்பு, தமிழினி, நவம்பர் 2002, பக்கம் 27 )