இதை இலக்கியத் துணிச்சல் இழையிலும் போட்டிருக்கலாம். இருப்பினும் விஷ்ணு மாயையின் பிரஸ்தாபம் இங்கு நடப்பதாலும், நான் எதை எழுதப்போகிறேனோ, அது எதைப்பற்றிக் கூற வருகிறதோ எல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால் பழைய கேள்விக்குறியிலேயே வந்து முடிவதால், அட்ங்காப் பிடாரியெல்லாம் கடைசி பெஞ்ச் என்பதைப்போல இங்கேயே இடுகிறேன். சில சமயத்தில் ஆலாபரனையை நீட்டுவதில் ஒரு சுகம். )))
தாவோ மார்க்கத்துச் சீன லாவோட்ஸு கூறுகிறார் :--
தாவோ என்பது ஒரு பாத்திரம்,
காலி
ஆனால் முடிவில்லாமல் அதிலிருந்து
எடுத்துக்கொண்டே இருக்க முடியும்
மீண்டும் நிரப்ப வேண்டும் என்ற
அவசியமில்லை.
அவ்வளவு விரிவு நெடிய ஆழம்
அத்தனைப் பொருட்களுக்கும்
அதுதான் மூதாதையர் போலும்.
அதனுள் மூழ்கி கூரிய முனை
மொண்ணையாகி விடுக்கிறது
தீர்க்கமான முறைப்பு
கூசிச் சிதறிய பார்வையாகி விடுகிறது
கஷ்டமானவைகள்
அதி எளிமையானவையாய்
முடிந்துவிடுகின்றன.
நித்யத்வம் போன்றே
நிச்சல மௌனமாய் இருக்கிறது
தாவோ;
யார் குழந்தையோ அஃது யானறியேன்
லாஓ ட்ஸு, ஷ்வாங் ட்ஸு இரண்டு புத்தகங்கள் அடங்கியது தாவோ. சீனத் தலை நகரத்தில் ஆவணக் காப்பகத்தில் வேலை செய்த லாஓ ட்ஸு, ஹொனான் பிரதேசத்தில் ஆட்சிப் பொறுப்பு எதனிலோ இருந்த ஷ்வாங் ட்ஸு என்பது தவிர ஏதும் விவரம் இல்லை. 300 கி மு வாக்கில் இருந்திருக்கலாம்.
ஷ்வாங் ட்ஸு கூறுவது ;--
ஈரம் மிக்க இடத்தில் மனிதன் தூங்கினால் வலிக்கும் முதுகோடு எழுந்திருப்பான். பாதி மரணம என்ற உணர்ச்சி ஏற்படும். ஆனால் ஈல் என்னும் கடல் வாழ் உயிரினத்திற்கோ?
மரத்தில் மனிதன் வாழ முயன்றால் வெறுத்தே விடுவான். ஆனால் குரங்குகள்?
இந்த மூவரில் யாருக்குத் தெரியும் எங்கு வாழ்வது சரியானது என்று?
மனிதர் மாமிசம் உண்கின்றனர்; மான்கள் புற்களை உண்கின்றன; பலகால் உயிரினங்கள் பாம்புகளை விரும்புகின்றன; ஆந்தைகளும், காகங்களும் எலிகளைச் சுவைக்கின்றன.
இந்த நால்வரில் தயவு செய்து சொல்லுங்கள் யாருக்குச் சரியான நாவின் சுவை இருக்கிறது?
மனிதர் மாஓ ஷியாங், லீ சீ ஆகிய பெண்களை அசத்தல் அழகிகள் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்களைப் பார்த்ததுமே மீன்கள் கடலுக்கடியில் ஓடிவிட்டன; பறவைகள் வானின் உயரே பறந்து விட்டன; மான்களோ பாய்ச்சலில் ஓடியே விட்டன.
இந்த நால்வரில் யாருக்குச் சரியான அழகுணர்ச்சியின் நிதானம் தெரிந்திருக்கிறது?
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
<< Home