Friday, August 19, 2011

தேசியம் -- 2

I believe that the strength which spoke in the Vedas and Upanishads, in the making of religions and empires, in the learning of scholars, and the meditation of the saints, is born once more amongst us, and its name today is Nationality.  

ஆழ்ந்த நெடுங்காலத்தே வேதங்களிலும், உபநிஷதங்களிலும் மனிதர்களோடு பேசிய பலம் அது என்ன? 

ஸங்கச்சத்வம், ஸம்வதத்வம் 
ஸம்வோ மனாம்ஸி ஜானதாம் 

ஒன்றுறப் பழகுவோம், ஒன்றுற மொழிவோம் 
ஒன்றுற மனத்தால் உணர்ந்திடுவோம் நாம் 

என்று முழங்கிய ருக் வேத காலத்திலும் சரி, 

ஹே அம்ருதஸ்ய புத்ரா: 

ஏ அழியாமையின் புதல்வர்களே! 

என்று மனிதர்தம்மைப் பார்த்து விளித்த உபநிஷத காலங்களிலும் சரி, 

அவ்வாறு பேசிய அந்தப் பலம் என்ன? 

வசுதா ஏக குடும்பகம் -- உலகம் ஒரே குடும்பம் 

என்ற எண்ணத்தோடு அகில உலகும் ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி தன் அடியால் அளந்த நெடியோனைப் பாடிப் பரவி, அனைத்தும் அவனுக்குச் சரீரமாக நிற்கையாலே இந்த உலகமே அவனுக்கு விபூதியானது என்ற எண்ணத்தில் 'நிற்பதெல்லாம் நெடுமால்' என்று ஸ்ரீவைஷ்ணவ மதத்தை, ஆகமப் பொலிவோடு பாடிப் பரப்பிய ஆழ்வார்களின் பாசுரங்களில் ஒலித்த அந்தப் பலம் எது? 

பஹுகுடும்பி என்று அனைத்துலகையுமே தன் குடும்பமாக உடையவன் சிவபெருமான் என்று அனைத்துயிர்களும் பசு என்றும், அவன் ஒருவனே பதி என்றும், பதியைப் பசு சார்ந்திடப் பாசம் விலகும் என்று மும்மலம் நீங்கிய முத்தி நிலையைக் கண்ட சைவம் நாயன்மார்களால் ஆகமங்களின் அடிப்படையில் தழைத்தது எந்தப் பலத்தால்? 

உலகெங்கணும் பெண் என்பவள் சொத்து ஜாபிதாவில் சேர்ந்த ஒரு பொருள் என்ற எண்ணத்தில் பல இனங்கள் உலகில் இருந்த காலத்திலேயே, துணிந்து பெண்ணின் பார்வையில் பரம்பொருளைப் பெண்மையின் முழுமையாகக் கண்டு, அந்தப் பெண்ணின் சக்தியால் இயங்கும் கடவுளரே அனைத்து கடவுள்களும் என்று சித்தாந்தம் செய்த சாக்த மதம் எழுந்தது எந்த பலத்தின் மீது? 

இதைப் போல் இந்த மண்ணில் எவ்வளவு மதங்கள்! அவை எழுந்ததெல்லாம் எந்தப் பலத்தின் அடிப்படையில்? 

உலகில் பல அரசுகளும் அந்நிய மதங்களைச் சேர்ந்தவர்களை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்து புகலடைந்த பழங்காலத்து பார்ஸிகளாகட்டும், யூதர்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும், யாராயினும் சரி நட்புக்கரத்தோடு உதவி நாடி வந்தவர்க்குப் புகலிடம் தந்து, அவர்க்கு உரிய வழிபாட்டிடம் முதற்கொண்டு தம் செலவிலேயே கட்டிக் கொடுத்து, வந்து சேர்ந்த அந்நியர் இதைத் தம் சொந்த பூமியாகக் கருதும் வகையில் அவர்களுக்கு வேளாண்மை (உபகாரம்) செய்த அரசர்கள் கட்டி எழுப்பிய சாம்ராஜ்யங்கள் எல்லாம் எந்த பலத்தின் அடிப்படையில்? 

இந்த உலகில் எதுவும் நிலைத்ததன்று. ஆத்மா ஒன்றே நிலைத்தது என்ற தீரமான ஆத்ம பலத்தின் அடிப்படையில் அன்றோ இவையெல்லாம் எழுந்தன! 

பெரும் வித்யைகளைக் கண்ட மாபெரும் கல்விமான்கள், உலக இனங்கள் பலவும் காட்டில் அலைந்து கொண்டு தம் உடலில் ஊறும் பூச்சிகளைக் கூட எடுத்தெறிய அறியாதே திரிந்த காலத்தும் உலகம் வியக்கும் அறிவுத் துறைகளைக் கண்ட பேரறிஞர்கள், தம் அறிவுப் பெட்டகங்களை எந்த பலத்தின் அடிப்படையில் யாத்தனர்? 

ஆத்ம பலத்தின் அடிப்படையிலன்றோ! 

அலெக்ஸாண்டர் பழங்காலத்தில் படையெடுத்து வந்த காலத்து தியானத்தில் ஆழ்ந்திருந்த ஒரு முனிவரைத் தன் நாட்டிற்கு வருமாறு வற்புறுத்த அவர் மறுக்க, தான் அவரைக் கொலை செய்யவும் கூடும் என்று மிரட்டிய போது பெரும் சிரிப்பாகச் சிரித்துவிட்டு, 'ஒரு பேரரசராக இருந்து கொண்டு இப்படி அந்நியாயத்துக்குப் பொய் சொல்லுகிறீரே! உம்மால் முடியாத காரியமே அதுதான். ஏனெனில் வாளால் வெட்டப் பட முடியாதவன் நான். நீரால் நனைக்கப் பட முடியாதவன் நான். தீயினால் எரிக்கவோ, காற்றினால் உலர்த்தவோ பட முடியாத என்னைக் கொல்வேன் என்று சொல்லி நீர் போய்யராக ஆகிவிட்டீரே!' என்று அந்த முனிவன் தியானம் விழித்துச் சிரித்த சிரிப்பு எந்த பலத்திலிருந்து எழுந்தது? 

ஆங்கில ஆட்சியில் தொடக்கத்தில் ஹிமாலயச் சாரல்களில் ஒரு முனிவன் ஆழ்ந்த தவத்தில் இருக்க, அவரிடம் ஏதோ கேட்டுப் பதில் வராத காரணத்தால் ஆங்கிலப் படைவீரன் கோபத்தில் அந்த முனிவரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட, சாகும் போதும் அந்த முனிவன், 'நீயும் அவனேதான் நீயும் அவனேதான்' என்று இருகை கொட்டிச் சிரித்தபடி உயிர் பிரிந்தானே அந்த மரணத்தையும் எள்ளி நகையாடும் சிரிப்பு எந்த பலத்தின் அடிப்படையில் எழுந்தது? 

ஆத்ம பலத்தின் அடிப்படியில்தானே! 

அந்த ஆத்ம பலம்தான் இன்று நம்மிடையே புத்துருவம் கொண்டு தேசியமாக உணர்வின் வடிவம் கொண்டு எழுந்துள்ளது. 

இந்திய வரலாற்றை நன்கு ஊன்றிக் கற்கையில் இந்தக் காலம் கடந்த உண்மையில் என் நம்பிக்கை அசைக்கவொண்ணததாய் ஆகிறது -- 

என்பது தேசிய உணர்வெழுந்தோரின் ப்ரார்த்தனையில் மூன்றாங்கண்ணியாக சகோதரி நிவேதிதா உரைக்கிறார்.

I believe that the strength which spoke in the Vedas and Upanishads, in the making of religions and empires, in the learning of scholars, and the meditation of the saints, is born once more amongst us, and its name today is Nationality.  

நிவேதிதாவின் சீடர் இதற்கு விளக்கம் பெய்யும் வகையில் யாத்த பாடலைக் காண்போம். 

முன்னை யிலங்கை அரக்கர் அழிய 
முடித்த வில் யாருடை வில்? - எங்கள் 
அன்னை பயங்கரி பாரத தேவி நல் 
ஆரிய ராணியின் வில். 

இந்திர சித்தன் இரண்டு துண்டாக 
எடுத்த வில் யாருடை வில்? -- எங்கள் 
மந்திரத் தெய்வதம் பாரத ராணி 
வயிரவி தன்னுடை வில் 

ஒன்று பரம் பொருள் நா மதன் மக்கள் 
உலகின்பக் கேணி யென்றே -- மிக 
நன்று பல் வேதம் வரைந்தகை பாரத 
நாயகி தன் திருக் கை. 

காண்டிவ மேந்தி உலகினை வென்றது 
கல்லொத்த தோளெவர் தோள்? -- எம்மை 
ஆண்டருள் செய்பவள், பெற்று வளர்ப்பவள் 
ஆரியர் தேவியின் தோள் 

போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை 
புகன்ற தெவருடை வாய்? -- பகை 
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத 
தேவி மலர்த்திரு வாய் 

(பாரத மாதா -- சில கண்ணிகள் -- பாரதியார் கவிதைகள், சீனி விசுவநாதன் பதிப்பு, பக் 38, 14-4-1991)

*


I believe that the present of India is deep-rooted in her past, and that before her shines a glorious future. 


"தர்மமே யுருவமாத் தழைத்த பேரரசரும் 
நிர்மல முனிவரு நிறைந்த நன்னாடு. 
வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை 
யூரவர் மலடியென் றுரைத்திடு நாடு. 
பாரத பூமி பழம் பெரும் பூமி. 
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதிர்! 
பாரத நாடு பார்க்கெலாந் திலகம்; 
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதிர்! 
பாரத நாடு பார்க்கெலாந் தெய்வமாம் 
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதிர்! 
வானக முட்டு மிமயமால் வரையு(ம்) 
ஏனைய திசைகளி லிருந் திரைக் கடலுங் 
காத்திடு நாடு கங்கையுஞ் சிந்துவும் 
தூத்திரை யமுனையுஞ் சுனைகளும் புனல்களும் 
இன்னறும் பொழில்களும் இணையிலா வளங்களும் 
உன்னத மலைகளு மொளிர்தரு நாடு. 
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க 
மைந்நிற முகில்கள் வழங்கு பொன்னாடு. 
தேவர்கள் வாழ்விடந் திறலுயர் முனிவர் 
ஆவலொ டடையு மரும்புகழ் நாடு. 
ஊனமொன் றறியா ஞான பூமி 
வானவர் விழையு மாட்சியார் தேயம். 
பாரத நாட்டிசை பகர யான் வல்லனோ? 
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதிர்." 

(பாரதியார் கவிதைகள், சீனி விசுவநாதன் பதிப்பு) 

பாரத பூமி பழம் பெரும் பூமி -- இந்த வரியில் கிட்டத்தட்ட பாரத வரலாறே அடங்கியது எனலாம். ஒரு நிலப்பரப்பு எப்பொழுது பூமியாக ஆகிறது என்பதை உணர்ந்தாலே பாரதம் பூமியாக ஆகி வந்த காலத்தைக் கணக்கிடுதல் கடினம். 

ஒரு மரம் எவ்வளவுக் கெவ்வளவு நிலத்தின் ஆழத்தில் தன் வேரைப் படர விட்டு நிற்கிறதோ அத்தனைக்கு அத்தனை அதன் நிலைப்பாடு எதனையும் தாங்கி நிற்கும் வலிமை உடையது. 

மேலோட்டமாக வறட்சி ஏற்படினும் தன் ஊட்டத்திற்கு அந்த மரம் ஆழ்நிலை நீர்ப் பற்றிலிருந்து உயிர் பெற்றுத் தழைக்கும். 

பாரதம் என்பதைச் சார்ந்த எந்த பண்டைய நிறுவனமும் ஆத்ம பலத்தில் வேர் கொண்டு எழுந்தது என்று பார்த்தோம். அந்த ஆத்ம ஞானம் பழங்காலத்திலேயே அதனால் திட்ட வட்டமாக வாழ்க்கையின் ஆகச்சிறந்த விழுமியமாகக் கைக்கொள்ளப்பட்டு விட்டது. 

எனவே பாரதம் தன் நெருக்கடிக் காலங்களில் எல்லாம் தன் ஆழ்நிலை நீர்ப் பற்றிலிருந்து பெரும் உயிரூக்கம் நித்தியத்தின் நிலைப் பேற்றிலிருந்தே கிடைக்கப் பெறுகிறது. 

இதை அந்நிய தேசத்தான் ஒருவன் புதிதாகக் கண்டுபிடித்து வியக்கலாம். ஏங்கலாம். இந்தியாவில் தான் பிறக்காமல் போனோமே என்று வியாகுலம் எய்தலாம். ஆனால் இந்தியக் குடிமகன் என்பவன், அதாவது குடிமகர்க்கு உரிய கல்வியைத் தன் உணர்வின் செறிவாய்க் கொண்டவர், அதாவது தேசியத்தின் திறம்படிந்த திருவாளர் எவரும் புதிதாக இதை அறிந்து கொள்வதில்லை. 

தாயின் அரவணைப்பில், தந்தையின் அக்கறையில், ஆசான்களின் ஆன்ற அறிவுரைகளில், மூத்தவர்களின் பாசக் கதைத் தாலாட்டுகளில் அவன் பெறுகின்ற இயற்கையான ஜீவ போதம் இந்தத் தேசியம். அதாவது பாரதத்தைப் பற்றிய உணர்வு மயமான ஒட்டுறவு. 

இதைத்தான் சகோதரி நிவேதிதா 'believe' என்ற வார்த்தையை இட்டுக் குறிக்கிறார்.  

இது இல்லாததை நம்புவது போன்றதன்று. தன் உள் ஆழ்ந்த உணர்வுப் புலத்தில் கலந்து மிளிரும் ஒன்றை ஒருவர் தெரிவிக்கும் போது எந்தச் சொல்லை இட்டு உரைப்பது என்ற திகைப்புதான் இந்த believe என்ற சொல்லின் பொருள். 

இதைத்தான் பாரதி மிக அழகாக 'நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதிர்!' என்று மீண்டும் மீண்டும் சிவாஜி மகராஜ் வாயிலாகக் கூறுகிறார். 

ஓர் இந்தியர் தேசியவாதியாக ஆவது இல்லை பிரச்சனை. அவர் தம் தேசிய உணர்வைத் தம் நெஞ்சிலிருந்து அகற்றாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதைத்தான் பாரதி திறம்பட மீண்டும் மீண்டும் அகற்றாதிர் என்று எச்சரிக்கிறார். 

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பது பிரச்சனையன்று. தம் இயல்பான ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டு நோயைத் தன் மீது ஏறிட்டுக் கொள்வதுதான் பிரச்சனை. 

அவ்வாறு எந்தச் சூழலிலும் நோய் நம் இயல்பான நன்னிலையைக் கெடுக்காமல் இருக்கத்தான் தடுப்பு மருந்துகளை உட் கொள்கிறோம். 

அது போலத்தான் தேசியக் கல்வி என்பது இந்தியர் உட்கொள்ளும் தற்காப்பு மருந்து. நிஜத்தை மறக்க உட்கொள்ளும் போதையன்று. அந்த போதை உலகம் தழுவிய பார்வை என்பதைப் போலியாகப் போர்த்திக்கொண்டு வந்தாலும் அது போதை போதைதான். 

இது ஒரு வினோதமான அலிபாபா குகை போன்றது. ஒருவர் தம் பழமையை வெறுத்து, ஒதுக்கி, உணராமல் புறந்தள்ளி, எதிர்காலமே போதும் என்று பழமையின்பால் கண்ணை மூடிக்கொண்டு, முன்னேற நினைத்தால், இரட்டைப்பூட்டு என்ன, தொட்ட இடமெல்லாம் பூட்டாகத் தொங்கியபடி முன்னேற்றப் பாதை இருண்டு போய் ஒன்றும் தெரிய மாட்டேன் என்கிறது. 

ஆனால் அதே, ஒருவர் தம் பழைமை என்ன என்பதை உள்ளபடி உணர்ந்து, தாமும் தம் முன்னோரும் உலகளாவிய ஒப்பு நோக்கில் பார்த்தால், எல்லா இனத்திலும் இருப்பது போன்றே சில தவறுகள் இருந்திருப்பினும், தம் முன்னோர் சாதனைகள் ஆற்றியிருப்பவை ஏராளம் என்று உணர்ந்து, அந்தத் தெளிவில் அவர் எந்தத் திக்கில் முன்னேறினாலும் அந்தத் திக்கும், எதிர்காலமும் திறக்காத கதவுகள் எல்லாம் திறந்து கொள்கின்றன. அவருடைய எதிர்காலம் ஒளியின் மேய்ச்சல் நிலமாய்க் காட்சியளிக்கின்றது. 

இந்த வினோதத்திற்கான மந்திரச் சொல்தான் சகோதரி நிவேதிதா கூறுவது: 

I believe that the present of India is deep-rooted in her past, and that before her shines a glorious future. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்