ஓராளு சர்வாதிகாரி. மனிதர்கள் அனைவரும் மனத்தைக் கொன்றுவிட்டு, தான் பேசும் கூட்டத்தில் வித்யாசங்களே அற்ற மொத்த முண்டங்களாய் அமர்ந்து கேட்க வேண்டும். அதுதான் தான் காட்டப் போகும் லட்சிய உலகின் பயிற்சி என்கிறான்.
இன்னோராளு உலகின் பெருத்த கண்டங்கள் யுத்தத்தில் மோதும் போது, ஒரு மிருகத்தினும் இழிந்த வன்முறைக் கோமாளியைத் தான் தான் உள்ளே புகுந்து யோக சக்தியால் அடக்கினேன் என்கிறான்.
மற்றோராளோ என்னதுக்கு யோக சக்தி. நேரேயே போய் ஆளைக் கண்டுவிட்டு கூட்டு வச்சுக்கப் பார்க்கிறேன் என்று போகிறான்.
இதில் முதல்ல சொன்ன ஆளுக்குப் பரிந்து பேச யாரும் இப்ப முனைய மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
அதுக்கு முனைகிற அசடுகளும் உலகில் இருக்கு. அதாவது அப்படியெல்லாம் ஒன்றும் கொடுமை நடக்கவே இல்லை. எல்லாம் கட்டுக் கதை. ஹிட்லர் சமத்து சக்கரைக் குட்டி. அவர் பாட்டுக்கு ஜர்மனியை உயர்த்தணும்னு பாடுபட்டாரு அவ்வளவுதான். அப்படீன்னு நடந்ததையெல்லாம் எப்படி மறுத்துப் பேசலாம்னு சால்ஜாப்பு, மழுப்பல் பண்ணித் திரிகிற கூட்டம். (இந்த முயற்சிக்குப் பேர்தான் Negationism)
ஆய்வாளர்களாலும், அறிவுலகத்தாலும் ஐயம் திரிபற அந்தப் பைத்தியக்காரனைப்பற்றி விண்டு விளக்கி வைக்கப் பட்டதாலேயும், மக்கள் விழித்துக் கொண்டுவிட்ட காரணத்தாலேயும் பூசி மொழுகல் ஜம்பம் சாயாததுனால ஹிட்லர் ஹிட்லர்தான்.
அவனை அப்படியே உணர்ச்சி பூர்வமாக ஏற்று அவன் பின்னால் சென்றுவிட்டு, அவன் மறைவுக்குப் பின்னர், மயக்கம் கலைய, ஐயோ என்ன கொடுமைகளை சித்தாந்த கிறக்கத்தில் செய்துவிட்டோம் என்று மனம் கவல்கின்ற ஜர்மானிய மனசாட்சி ஒரு பக்கம்.
சரி இந்தப் பைத்தியக்கார பஜனை இத்தோடு நிற்கட்டும். இதை ஏன் ஆரம்பித்தேன் என்பதற்குக் காரணம் உண்டு.
ஒட்டுமொத்தத்துல இந்தப் பேயரசுக்கு இலக்கே மனித ஜீவனின் சுதந்திர உணர்ச்சி.
தான் ஓர் ஆளுன்னு மனிதன் நினைக்கக் கூடாது.
'நானில்லை. அவன் வரமாட்டான். நம்பாதே' என்ற நடமாடும் பிணங்களாய் மனித சமூகம் ஆவதுதான் இந்த ஃப்யூரர் ஓவென்று ஊரெல்லாம் கேட்கும்படியாக அலறிய நோக்கம்.
சரி. இந்த ஆளு சொல்றதுக்கும், நம் காலத்துல ஜேகேன்னு ஓராளு, அதான் அந்த ஜிட்டு கிட்டு தான், அவர் சொன்னதுக்கும் என்ன வித்யாசம்?
நான் ஆ? பேசாத. நீ யாரு உண்மையில. என்னிக்கு உனக்கு இந்த நான் என்கிறதே போகிறதோ அன்னிக்குத்தான் உண்மையை உணர முடியும்.
இந்தத் 'தான்' என்பது என்ன?
Thought is the gap between the preceding thought and the succeeding thought.
இந்தப் பேச்சு அவர் பேசும் போதுதான் வசந்த விஹார்ல, 'சரி சரி எனக்கு ஜோலி இருக்கு. நான் கிளம்பறேன்னு' எழுந்துவந்துட்டேன்.
அதிமானச மகாசக்தி வந்து இறங்கணும்.
ஏ 'நானே' நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு
என்கிறார் ஸ்ரீஅரவிந்தர்.
அரவிந்தர் என்ன சொன்னாரு? ஹிட்லர் என்ன பேசினாரு? ஜே கே என்ன ஆங்கிலத்துல மொழிந்தாரு? அப்படீன்னு பார்த்தா எல்லாம் ஒரே இடத்தை நோக்கித்தான் போவுது.
நான் அப்படின்னு ஓர் ஆளு இந்த மனுசாளுக்குள்ள உட்கார்ந்துகிட்டு, இந்தப் பெரிய மனுசாளுக்கெல்லாம் ரொம்பவே கடுப்பேத்துறான்.
அதான் இவிங்க பல குரல்ல, பல மொழியில அட்டாக் பண்றதெல்லாம் இந்த 'நான்' ஐ.
ஆனால் ஹிட்லரு பௌதிக ரீதியாக அதைச் செய்து காண்பித்ததால் முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் கொடூரமுமாக இன வெறுப்பின் அஜண்டாவாக ஆகிப் பல்லிளித்தது.
மத்தவங்க சொன்னது ஆன்மிகத் தளம். அதுனால 'முதல்ல இதையெல்லாம் ஒட்டுக்க சேர்த்து ஒரு மூட்டையா கட்டினதே தப்பு' என்று சிலர் சொல்றதுலயும் ஒரு பாயிண்ட் இருக்கு.
சரி ஆன்மிக தளம்னு எடுத்துக்கிட்டாலும் அதுக்குன்னு யோக சக்தி மாயமந்திரம் என்றால் என்ன அர்த்தம்? அதுக்கும் பதில் சொல்ராங்க.
நோண்டறதா இருந்தா ஆதிலேந்து நோண்டு. அந்தக் கதையெல்லாம் சரிதான் என்றால் எங்க அரவிந்தர் சொன்னது மட்டும் தப்பா? எதுலயும் லாஜிக் வேனுமில்ல?
பழங்காலத்துல பார்த்தா வேதாந்திகள் இந்த விஷயத்தையெல்லாம் தீவிரமாகவே யோசித்து எது மெய் எது பொய் அறிவின் பிரமாணங்களில் எதுக்கு எவ்வளவு யோக்கியதை? என்று epistemological categorization and gradation பண்ணி வைத்திருக்கிறார்கள்.
சரி அந்த வேதாந்திகள் வாழ்க்கையிலாவது இந்த மாதிரி அதீத நிகழ்வுகள் சொல்லாம இருக்காங்களான்னு பார்த்தா, ம் ம் அங்கனயும் இந்தக் கதைகள் வருது. ஆனால் அந்த நிகழ்வுகளை அடிப்படையா வைத்து அந்த வேதாந்திகள் தங்கள் கருத்துகளை வளர்த்தெடுத்திருக்காங்களான்னு பார்த்தா..ம்ஹும் தடயமே இல்லை.
ஆனால் என்ன ஒன்று நாம் தான் இந்த விசாரத்துல தலையைப் பிச்சிக்கிறோம்னு இல்ல, அவங்களே அந்தக் காலத்துல இந்த மாதிரி விசாரப் பட்டிருக்காங்க என்பது ஆச்சரியம்தான். நமக்குச் சந்தோஷமும் கூட.
அதாவது பொதுமக்களுக்கு அந்தக் காலத்துல இருந்த பல பல நம்பிக்கைகளைக் குலைக்காமலேயே பெரியவங்க வித்வான்களுக்குன்னு வரும் போது விசாரத்தைத் தயவு தாட்சண்யம் அற்ற நுண்கருத்தியல் ஆழ்சிந்தனைத் துறையாக ஆக்கி வைச்சிருக்காங்க.
அதாவது ஏதாவது நம்பிக்கையைக் கைக்கொண்டு தங்கள் வாழ்க்கைக்கு ஓர் ஆதுரத்தை நாடும் பொதுமக்களுக்கு அவர்களின் ஈடுபாட்டிற்குத் தகுந்தாற்போல் புராணங்கள், அதீத நிகழ்வுக் கதைகள், அதாவது 'எதுவும் சாத்தியம் பயப்படாதே நம்பிக்கை கொள்' என்ற செய்திப் போய்ச் சேரும் படியாக.
அதுவே யாராவது கண்டிப்பா கறாரா தீரத் தெளிய எது உண்மைன்னு விசாரம் பண்ணுவேன்னா அவங்களுக்கு வித்வான்களின் கடும் அறிவு நெறிக் கோட்பாடுகளால் ஆன விசார மார்க்கம், இப்படி ஒரு பலமுக ஆன்மிகக் கல்வி அந்தக் காலத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதான்.
ஆனால் அதையெல்லாம் காரணம் காட்டி இன்னிக்கு கார்ப்பரேட் குண்டலினிச் சாமியார்கள் தாங்க திரிச்சு விட்றதும் சுத்தமான அக்மார்க் சமாச்சாரம்தான் என்றால் என்ன பண்ணுவது?
இன்னொன்று. வேதாந்த நெறிதான் வித்வான்கள் உகந்தது. வியாசர் தொடங்கி ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் போன்ற பெரும் வேதாந்திகள் எல்லாம் உகந்தது; உண்மையில் அதுதான் மதம் என்பதே. மற்றவை எல்லாம் சும்மா ஒளா ஒளா என்றால் அப்பொழுதும் ஒரு கேள்வி எழுகிறது.
இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் பண்டைக் காலத்துலதான்னு இல்லை; நம்மில் சிலர் பலர் வாழ்விலும் கூட ஏற்பட்டிருக்கலாம்.
அதாவது அறிவினால் சிறிதும் விளக்க முடியாத ஆனால் உண்மை நிகழ்வுகள் நடந்திருக்கலாம்.
நாம் யாரும் எந்த மடத்துக்கும் தலைவர் கிடையாது. எந்தப் புகழ், பணம், படாடோபமும் இல்லாத நம் அன்றாடச் சூழலிலேயே அறிவின் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு அடங்காத அதீத நிகழ்வுகள் இன்று மட்டுமன்று எவ்வளவோ காலமாக எத்தனையோ இடங்கள் உலகம் முழுதும் நட்ந்ததாகச் சொல்லப்படுகின்றன.
நம்மிலும் பலரைத் தனியாகக் கேட்டால் 'ஆமாம் சார், ஒரு நிகழ்ச்சி பாருங்க. இப்பவும் எனக்கு எப்படீன்னு புரிஞ்சிக்க முடியலை. நீங்க நம்புவீங்களோ மாட்டீங்களோ, எனக்கு நடந்ததுனால என்னால இல்லைன்னு சொல்ல முடியலை' என்று சொல்லும் நிகழ்வுகள் உண்டுதானே!
அப்படியென்றால் இந்த மாதிரி நிகழ்வுகளை எப்படி விளக்குவது? எப்படிப் புரிந்து கொள்வது? இந்த மாதிரி நிகழ்வுகளைக் கண்டுகொள்ளாமலேயே நம் நுண்மாண் நுழைபுலம் மிக்க அறிவுத் தன்மை எத்தனை நாள் காணாக்கண் இட்டிருக்க முடியும்?
கொஞ்சம் தெளிவா குழப்பிட்டேனோ?
***
ஏன் மற்றவரைச் சொல்ல வேண்டும்? ஏற்கனவே ஒரு குருவிக்கும் எனக்கும் நடந்த என்கவுண்டர் பற்றி எழுதியிருக்கிறேன்.
என்னய்யா பெரிய விஷயம்? குருவி ஒன்று தன் குஞ்சு கீழே விழுதுவிட்டது என்னும் போது வழிமறித்தது. அவ்வளவுதானே. என்ற பதில் வரலாம்.
ஆனால் ஒரு சின்ன பறவை முன்பின் பழகியறியாத மனிதனிடம் தன் குஞ்சுக்காகக் காலின் முன் அரைவட்டம் அடித்தபடி மறிக்குமானால், நான் கற்ற அறிவியல் அங்கு எனக்கு அதனை விளக்கவில்லை.
The problem is it is trying to communicate in urgency.
அதை நான் மீறி ஒரு பேப்பரைச் சுருட்டி அப்புறம் தள்ளிவிட்டுப் போய்விட முடியும்.
அதன் முன்னால் நான் பூதாகாரமான மிருகம்.
அதுவும் மிருக நியதிகள் எல்லாம் வைத்து அதனால் அனிச்சை உணர்வால் கணிக்க முடியாத மனிதன்.
என்னிடம் வந்து அது ஏதோ தெரிவிக்க விழைவதே என்னால் புரிந்து கொள்ளக் கஷ்டமாக இருக்கிறது.
நான் என்னை மனிதன் என்றும் அதனைச் சிறு புள் என்றும் வகைப் படுத்தி உணர்ந்தால் போல் அது என்னையும் தன்னையும் வகைப் படுத்தி உண்ர என்ன வாய்ப்பு? முதலில் அவ்வளவு தகவலகளை ப்ராஸஸ் பண்ண ஏது அங்கு மூளைப் பொருள்?
ஆனால் என் புரிதலின்படி அது என்னை நிலைமையை உணர்ந்து திரும்பிப் போகும்படி செய்துவிட்டது. இத்தனைக்கும் வளர்க்கும் பறவையும் அன்று.
அதற்கு நாங்கள் செய்த ஒரே நல்லது அதன் கூட்டைக் கலைக்காமல் இருந்ததுதான்.
மற்ற சில நிகழ்வுகள் அதீதம் என்று வகைபடுத்த வேண்டியது சிலது உண்டு எனினும் நான் சாதாரணமாகத் தோன்றும் இதனையே உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன்.
ஒரு குருவியினால் அதனினும் பன்மடங்கு வடிவம் கொண்ட ஒரு மனிதனிடம் தன் துடிப்பு சிறகு அசைவுகள் ஆகியவற்றின் மூலம், அவன் உள்ளத்தில் 'இது நம்மை மீண்டும் உள்ளே சென்று விடுமாறு வேண்டுகிறது. நாம் எடுக்கப் போகும் சைகிளின் ஹாண்டில் பாரில்தான் கூட்டிலிருந்து கீழே விழுந்த அதன் குஞ்சு ஒட்டிக் கொண்டிருக்கிறது. அது பறந்தபின்னர் எடுத்துக்கொள்ளலாம்' என்று நான் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு குருவி தகவல் பரிமாறுகிறது.
நானறிந்த தகவல் பரிமாற்ற முறைகள் எதுவும் அங்கு செல்லுபடியாகவில்லை. அந்த மொழியும் எனக்குத் தெரியாத மொழி. அப்பொழுது அந்தக் கணத்தில் எந்த syntax மூலம் நான் அந்த மெஸேஜைப் புரிந்து கொண்டேன்?
அப்படியொரு சிறு குருவி முறையல்லா முறையில் அதாவது நானறியா முறையில் நேரடியாக என் உள்ளத்திற்குத் தெரிவிக்கும் என்றால், ஏன் ஒரு யோகி தன் தீவிர உள்ளப் பயிற்சியால் மற்ற ஒரு கொடூரனின் உள்ளத்தோடு நேரடித் தொடர்பு கொண்டிருக்க முடியாது?
இந்தக் கேள்வி கேட்டதாலேயே அறிவுலகம் என்னைப் பகிஷ்கரிக்கும் என்றால் அப்பொழுது அறிவுலகத்திற்கென்று சில மத நம்பிக்கைகள் உள்ளனவா?
ஆனால் இந்தக் கேள்வியை அனுமதித்தால் என்ன அபாயம் என்பதையும் நான் அறிவேன்?
யார் வேண்டுமானாலும் வேஷதாரிகள், ஏமாற்று வேலைக் காரர்கள் யோக சக்தி என்று சொல்லி விடும் புளுகுகளை எப்படிப் பிரித்தறிவது? விமரிசிப்பது?
யாராவது நான் தான் என் யோக சக்தியால் வர இருந்த அரிக்கேனைத் தடுத்து நிறுத்தினேன் என்றால் அதை மறுக்க அடிப்படை என்ன?
அதாவது அதீத நிகழ்வுகள் என்பன சுத்தமாக இல்லவே இல்லை என்று சொல்ல முடியுமா? இதற்கு அவரவர் மனசாட்சி பொதுவாகத் தாம் சந்தித்த நிகழ்ச்சிகளே தடயங்கள்.
ஆனால் அவை தடயங்களே ஒழிய அந்தத் தடயங்களை வைத்து எப்படிப் புரிந்துகொள்வது? அவற்றை எந்த பிரமாணங்கள் கொண்டு நிச்சயப் படுத்திக் கொள்வது?
அப்பொழுது அங்கும் அறிவியல் அணுகுமுறைகள்தாம் நமக்கு அந்த மாதிரியான நிகழ்வுகளின் வாஸ்தவங்களை ஆய்வு அடிப்படைகளாகக் கொண்டு விளக்கங்கள் தரமுடியும். இல்லையெனில் உண்மை எது போலி எது என்ற வேறுபாடு இல்லாமல் பொய்களின் பண்ணையாகிவிடும்.
<< Home