Saturday, May 06, 2006

இலக்கியம் என்பது என்ன

இலக்கியம் என்பது என்ன? என்ற கேள்வியும் எது இலக்கியம் இல்லை? என்ற கேள்வியும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஏனென்றால் இரண்டுமே மிகத்தெரிந்த ஒன்றை தெரியாததுபோல் பாவனையில் பேசுகிறது. எழுத்தின் எந்த நிலையிலும் இலக்கியம் சம்பவிக்கலாம் என்பதைத்தான் இந்த நிச்சயமின்மை குறிப்பதாகக் கொள்ளவேண்டும். ஏனென்றால் எழுதுவதெல்லாம் இலக்கியமாக ஆகிவிடாது.
எழுத்து, எழுதுபவன், படிப்பவன் என்ற மூன்று அம்சங்களை உள்ளடக்கிய இலக்கியம், மூன்றில் எந்த ஒன்றாலும் தனிப்பட விளக்கிவிட முடியாததாய் இருக்கிறது. மூன்றும் சேர்ந்த முழுமையிலும் விஞ்சி, அந்த முழுமைக்கே பொருள் தருவதாய், தான் அந்த முழுமையாலும் முடிந்த முடிபாக அறுதியிடவொண்ணாததாய் இருக்கிறது. பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் ஒரு மொழியில் , ஒரு சமுதாயத்தில் பிறக்கிறது. வெளி உலகோடு ஒத்தும் வேறுபட்டும் இயங்கும் மனத்தின் வெளிப்பட்டு பதிவு பெற்ற குறிப்புகளாலும் ஆன உலகில்தான் உயிர் பிறக்கிறது. எனவே பின்பு வளர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்படும் இலக்கியம் என்ற மொழியின் செயல்பட்ட வகையின் வேர்களுடைய துவங்கு நுனிகள், சமுதாயத்தின் முன்னோட்ட நிலையிலேயே பதிந்திருக்கின்றன. எனவே இலக்கியம் என்ற முழுமைக்குள் எழுத்து, எழுதுபவன், படிப்பவன் என்ற மூன்றையும் சௌகரியமாக அடையாளம் காணமுடிவதுபோல், இந்த மூன்றிலும், எந்த ஒன்றிலும் தீர்ந்தபடியாக இலக்கியத்தை அறிதியிட முடிவதில்லை.