Thursday, May 02, 2019

விவேகாநந்தரின் பிறந்தநாள்

கிழக்கின் கடலொன்று கடல் கடந்து வருகுது
கீர்வாண ஞானமெல்லாம் அலையெறிந்து பொங்குது
போர்வான நாடுகளில் பக்திப் புயல் அடிக்குது
சோர்வான உள்ளமெல்லாம் ஸோஹம் என்று பாடுது
சொந்த நாட்டு சோதரரின் சோகம் உள்ளே வாட்டுது
எந்தக் காட்டுள் போனாலும் சிந்தாகுலம் ஆகுது
பந்தம் அறுத்துப் பற்றறுத்துப் பார்சுற்றியாய் ஆனாலும்
பாரதத்தின் சொந்தம் மட்டும் பாரமாக கனக்குது
கிழக்கின் கடலொன்று கடல் கடந்து வருகுது
கீர்வாண ஞானமெல்லாம் அலையெறிந்து பொங்குது

காளி கோவில் பூசாரி கர்ப்பம் தரித்த கனவிது
காலமெல்லாம் தொட்டில் கட்டித் தாலாட்டும் விதியிது
ஞாலமெங்கும் ஞானமாகிக் கோலம் கொண்ட கொள்கையில்
சீலம் மிக்க தெய்வம் வந்து சீர்படுத்தும் சதுரிது
மேலை நாட்டு மோஹமும் தெரிந்ததுபோல் மத வேகமும்
கூலமாகிப் பிரிவினையில் மாச்சரியப் புன்யூகமும்
புலனுகர்வில் காமமும் பொறாமையால் பெருங் கோபமும்
அன்றாடம் ஓடும் வாழ்வில் அமைந்துவிட்ட லோபமும்
பொன்ற எழும் புலரியென புறப்பட்டு வரு தீரமும்
மன்பதைக்கு மனம் உருக மடை திறந்த ஈரமும்
மனிதர் எல்லாம் நடைபயின்ற கடவுள் என்ற தேற்றமும்
புனிதமாக்கப் பாமரத்தை நட்ட வித்தின் விளைச்சலாய்க்
கனிந்த காலக் கடைக்கண் ஓடி குவிந்த காதின் குழையொலி
சினுசினுங்க சீவனோங்க சுருதியின் கீதம் பாடியே
கிழக்கின் கடலொன்று கடல் கடந்து வருகுது
கீர்வாண ஞானமெல்லாம் அலையெறிந்து பொங்குது 


***