Tuesday, January 14, 2020

எதிராஜுலு செட்டியார்


                              என்றோ   ஒருவர்  வெட்டிய  கேணி   வழிச்செல்வோர்   தாகம்  தணித்துக் கொண்டே   இருக்கும்.  யாரோ  ஒரு  மகராசன்  என்று  பொது  நன்றியாக  மாறி   தனிப்  பெயர்   மறைந்தாலும்  அந்த  நன்மை   மறைவதில்லை.  ஆனால்   தீமை  புரிபவரை   அந்தப்  படுபாவி என்று   கால  காலத்திற்கும்   தனிப் பெயராகவே    இகழ்தல்   நிலைபெறுகிறது.  ஊருண்  கேணியாக   வாழ்ந்தவர்களையும்   தனித்தனியாக   நினைவு  கொண்டு   வாழ்த்தினால்  என்ன?  வாழ்த்துவதில்  என்ன  சோம்பேறித்தனம்?
                                விசிஷ்டாத்வைத  தரிசனம்   ஸ்ரீராமானுஜர்  காலம்   தொடங்கி  எம்பெருமானார்  தரிசனம்  என்று  கொண்டாடப்பட்டது.  பின் வந்த  பெரியோர்கள்   ஸ்ரீவைஷ்ணவ  தரிசனத்தை  74  துறைகள்  கொண்ட  தொண்டனூர் ஏரி என்று  உருவகமாகச்  சொன்னார்கள்.   ஸ்ரீராமானுஜர்   தொண்டனூரில்   வெட்டிய  ஏரிக்கு   74   படித்துறைகளாம்.   அதேபோல்  74   சிம்ஹாஸனாதிபதிகள் என்னும்   ஆசாரியர்கள்   மூலம்   பரப்பப்பட்ட  ஸ்ரீவைஷ்ணவமும்  ஊருக்குப்  பொதுவில்   வைத்த ஏரியாக   உருவகித்தார்கள்.
                                திருவாய்மொழிக்கு   வ்யாக்கியானமாக  அமைந்த   பகவத் விஷயத்  தொகுதியும்   பின்  வரும்  சந்ததிக்காக  வைத்த   ஊருண்  கேணிதான்.  அதை   அச்சில் ஏற்றிய   ஆரம்பகாலத்து  அரையர்  பதிப்பு   முதலியவையும்  ஊர்ப்பொது  நீர்நிலைகளே.  1870ல்  வந்த   தெலுங்குலிபி   பதிப்பு  பகவத் விஷயம்,  15நூல்கள்   அடங்கியது  மிகப் பெரிய  ஊர்ப் பொதுக்  குளம். 1925ல்  ஸ்ரீ  சே.கிருஷ்ணமாச்சாரியாராலும்,   ஸ்ரீ வை மு  சடகோபராமானுஜாசாரியாராலும்  பதிப்பிக்கப்பட்ட   பகவத் விஷயம்   பிரஸித்தியானது.  ஊருண்  கேணியான  பதிப்பு.   இதைப்   பெற  நான்  முயன்ற  காலத்தில்,  எனது  நண்பர்   டி. ரமேஷ்   தமது   அத்தைவீட்டில்   அந்த   ஸெட்  இருப்பதாகவும்,  அத்தையிடம்  கேட்டு  பெற்றுத்   தருவதாகவும்  சொல்லி  அதன்படியே   பெற்றுத்  தந்தார்.   அந்த   ஸெட்   ஸ்ரீ  வி.  ஆர். எதிராஜுலு  செட்டியார்  அவர்களுடையது.   ஸ்ரீ  செட்டியார்  அவர்கள்   பேப்பர்  கம்பெனியில்  பெரிய  பதவியில்  இருந்தவர்.  உலகப் போர்  காலங்களில்   ஸ்ரீ அண்ணங்கராச்சாரியாருக்கு  பேப்பர்  தட்டுப்பாடு  இல்லாமல்  கவனித்துக் கொண்டவர்.    ஸ்ரீ  பகவத்  விஷயம்  காலக்ஷேப  கோஷ்டிகளை   1940,  1950  களில்   சைதாப்பேட்டை  வட்டாரங்களில்  நன்கு  நடத்தி   வைணவ  உணர்வை   வளர்த்தவர்.  என்றோ  இவர்  வாங்கிப்   பயன் படுத்திய   பகவத்  விஷயம்  நூல்  தொகுதி   இன்றும் என்  பயன் பாட்டில்   இருக்கிறதென்றால்,   அதற்குக்  காரணமான   ரமேஷின்  அத்தையை   நினைக்கவேண்டும்.   ஸ்ரீ  செட்டியார்  அவர்களது   மருமகள்  ரமேஷின்  அத்தை.  நன்மை என்னும்   ஜீவநதி  என்றும்   வற்றுவதில்லை.  ரமேஷுக்குத்தான்   பெரும்  நன்றி  உரித்தானது.  ஆனாலும்   அவருக்கு  நன்றி  சொல்லி   அந்நியப்படுத்திக்கொள்ள  என்  சுயநலம்  விடவில்லை.