கல்பதரு தினம்
ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு தினம் என்பது கல்பதரு தினம் என்று கொண்டாடப்படும் ஆன்மிக நாளாகும். அன்றுதான் தம் நிறைவுக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி பரவசத்தில் நின்றவராய், யார் யார் என்ன ஆன்மிக நிலையை அடைய வரம் விழைந்தார்களோ அதையெல்லாம் கொடுத்தார் என்று அவரது சரிதம் கூறுகிறது. அதுமுதல் அன்றைய நாளை கல்பதரு நாள் என்று கொண்டாடுகிறது பக்த உலகம்.
கல்ப தருவாகிக்
காலம் கனிய நின்றாய்.
அல்பன் எனக்கும் அங்கு
இடம் உண்டா தெரியவில்லை.
விகல்பம் கூடியும் கூடாதும்
ஆழ்ந்த நிலை உன் இயல்பு.
விகல்பமே இல்லாது செல்லும்
விரசமாகிப் போன மயலது என் வாழ்வு.
அகண்ட ஆகாரமாகி
அருள்நிறை மாமர நிழல்கனிந்தாய்.
அப்பொழுதும் எனையொதுக்கும்
அக்கறைதான் எங்கு பயின்றாய்?
அருளுக்கும் விருப்பு வெறுப்பு உண்டென்றால்
மருளுக்கு விடிவேது?
மயலுக்கு முடிவேது?
அயல்தள்ளி வைத்த பயல்
முயல்கின்ற மொய்கழற்குப்
பயனற்ற வேட்கையோ அன்பு?
கயல்கண்ணிக் கோபப்
புயல்கண்ணிகாளி
செயல்தீர்ந்த சிவமீது ஆடி
உயக்கொண்ட நாளில்
உதவாத வாளும்
உதவிக்கு இன்றும் வருமோ?
உதவாத சேயென்று
மிதவாதம் அற்றெனையே
பிடிவாதமாக அருளா
உனையெண்ணி நிற்க ஒரு நாள்
எனைக் கண்ணில் படுகின்ற திருநாள்
மனப்புண்கள் தீருகின்ற பெருநாள்
நின்னடிக்கீழ் அமர்கின்ற அந்நாள்
இந்நாளே ஆகட்டும் நன்னாள்.
***
<< Home