Monday, November 11, 2019

ஸ்ரீராமாநுஜர் இருபது

ம்பெரு மானார்க்கே தோய்ந்த இதயத்துச் 
செம்பொருள் நாட்டம் சமைந்ததுவால் - நம்பெருமாள் 
ஈந்தவருள் ஈண்டு திருவருளாம் என்றிங்குப் 
போந்த இருபதுவெண் பா. 

*

தெண்ணீர பொன்னித் திரைகலங்கும் காலத்தே 
உண்ணீர்மை ஊட்ட உலகிதனைக் - கண்ணீரால் 
காத்த குணவாளன் கோத்தநெறி கூர்வதினால் 
பூத்துவரும் புத்துலகு பார். 

பாரோர் பலரோய்ந்து பானாள் விளக்கானார் 
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் காதலித்த 
ஏரார் எதிராசர் எங்கள் கதியானார் 
ஓரார் எவரிதனை ஓர்ந்து. 

ஓர்ந்து உவப்புற்றார் உத்தமர்க்கே ஆளானார் 
சோர்ந்து தவிப்புற்றால் செய்வதெவன் - சீராரும் 
செந்நெல் கவரியிடும் சங்கத் தமிழ்ச்செல்வர் 
இந்நாளில் இன்புற்றார் ஈண்டு. 

ஈண்டு புலர்ந்ததுவோ ஈருலகம் ஒன்றாமோ 
மீண்டும் சிறந்திடுமோ மாநெறியும் - நீண்டதன் 
தாளால் உலகளந்த தண்மைதான் இவ்வுலகில் 
வாளா விருந்திடுமோ தான். 

தானாய்த் திரிவார் தறுகண்மை யால்தரணி 
பான்மை இழந்த பசப்பறவே - பூன்றநற் 
பொற்குணத்தான் சிற்குணத்தின் செம்மை புலத்தி 
நற்குணர்த்தும் ஏந்தலவன் நூல். 

நூல்நுவன்ற மாட்சியோ மால்பயின்ற நெஞ்சதோ 
ஆல்துயின்ற சேய்வயிற்றில் அண்டமெல்லாம் ஆன்றபோல் 
கால்பயின்ற திக்கெலாம் கார்பயின்ற ஓரருள் 
கோல்பயின்று நின்றதாம் கோயில். 

கோயில் மணவாளர் கொள்ளைகொளும் நெஞ்சத்தை 
வாய்மொழியில் தாமிழந்தார் வார்த்தைக்கே - ஆயும் 
அறிவுடையார் அந்தண்மை ஆளும் தமிழில் 
செறிவுடையார் செய்தவமே தாம். 

தாமுகந்த தெவ்வுருவம் நன்றாய்த் தமருக்கே 
தோமற்ற ஓருருவில் தோன்றியிவண் - தாமாய்த் 
திரமாய்த் திருவரங்கம் தீர்ந்த நிலையாய்
வரம்தரும் வான்குரு வந்து. 

வந்தார் வருகவென்று வாராரும் வந்துவப்ப 
செந்தமிழ்க் கோதையும் செப்பினாள் - அந்தமிலா 
ஆர்வத் தமிழ்க்காதல் ஆன்றமறை அண்ணர்தாம் 
ஓர்ந்திட்ட திட்டம் உரை. 

உரைகொள் திருமொழிகள் உள்ளுவக்கும் ஈடால் 
உரைசால் திருவாய் மொழிக்கே - கரைகடந்த 
அன்புற்றார் ஆன்றதமிழ்ச் சொல்லுற்றார் சிந்தையினில் 
மன்னிடவே இங்குற்றார் மீண்டு. 

மீண்டுவந்த ஊமன் மொழிந்திட்ட வார்த்தையே 
யாண்டும்கொள் நெஞ்சேநீ யெவ்விடத்தும் - பாண்டவர்க்காய்த் 
தேர்நடத்தும் தாமோ தரனார்ப் பெருவார்த்தை 
நேர்நடத்தும் ஆசிரியன் நன்று. 

நன்றுரைத்தான் தீந்தமிழைத் தெய்வ மொழியென்றான் 
மன்றுரைத்து மண்ணுலகில் மன்னவைத்தான் - என்னுரைப்போம் 
கன்றுரைத்த கால்மாற்றும் தீங்குழலார் கண்ணற்கே 
அன்பூறும் பண்புடையோ மால். 

மாலாகி நெஞ்சம் மகிழ்ந்திடவே மன்னுதமிழ்க் 
கோலோச்சும் கொள்கைத்தாய்க் கொண்டாட்டம் - வேலோச்சும் 
வீசுவிழி மாதர் விறல்நேச மாமல்லர் 
ஆசறவே கொண்டான்தான் ஆள். 

ஆட்கொண்டான் ஓரரங்க மாளிகையை அன்புகொண்டே 
ஆட்கொண்டான் ஊமைதனை ஆர்கழலால் - வேட்டிருந்த 
மாமறையோர் கூரேசர் மன்னும் சொலவுகற்றார் 
காமுறுவர் கல்லா நெறி. 

நெறிநின்ற நின்மலர்க்கே போயொளித்துக் காட்டில் 
முறிவெண்ணை உண்டொளிக்கும் பத்தி - வெறிகமழும் 
நம்மாழ்வார் சொல்லாரும் நற்பொருளே நாட்டியெழும் 
அம்மாநல் பாடியத்தின் மாண்பு. 

மாண்புறுநல் சிந்தை மகிதலத்தின் வாழ்ச்சிக்கே 
சேண்குன்ற நாடர் சிறந்தவரம் - பாண்மிழற்றும் 
வண்டூது போதலரும் வாய்ப்பினால் வாய்மொழிக்குள் 
கண்டுழாய்க் கோலம் பயில். 

பயின்றும் துயின்றும் பயந்தும் புலர்ந்தும் 
செயிர்க்கும் உயிர்கட்கே சேமம் - நயக்கின்ற 
தாயாய்த் தமப்பனாய் எல்லாம் திருமாலாய் 
ஆய்ந்துரைத்தான் ஐயன் இனிது. 

இனிதாகும் இவ்வுலகு அவ்வுலகும் நன்றே 
புனிதராய்ப் போந்தார் பொலிய - மனிதரே 
வாழ்ந்தார் எனநயக்கும் விண்ணும் வரக்கண்டு 
வாழ்த்தும் முதல்தாய்ப் பொலிவு. 

பொலிந்தது பூதூர் புகழ்மலி கச்சி 
பொலிந்தது பொன்னரங்கம் வேங்கடம் பூத்துப் 
பொலிந்தது பூமி புலர்ந்தது வாழ்வு
பொலிந்தது பாரத நாடு. 

நாடுவார் நாற்பயன் தேடுவார் நன்மையே 
கூடுவார் கோயின்மை கொள்ளுவார் - பாடிய 
சேண்பொருள் சிந்தை அருளிச் செயலதாம் 
கோனெதி ராசர்தம் காப்பு. 

***