Monday, November 11, 2019

கடவுள் என்னும் வலை

கடவுளை ஒவ்வொருவர் ஒவ்வொன்றாக உருவகம் செய்துப் பேசியிருக்கின்றனர். ஆனால் கடவுளை யாரேனும் 'வலை' என்று உருவகம் செய்து பேசியிருக்கிறார்களா தெரியவில்லை. பேசியிருக்கக் கூடும்.

ஆனால் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் பேசியிருக்கின்றார்கள்.

அது போல் ஆழ்வார்கள் பேசியிருக்கின்றார்கள்.

ஸுதந்து: , தந்துவர்த்தன: என்று இரண்டு திருநாமங்கள் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உண்டு எனச் சொல்கிறது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். ஸுதந்து: அழகிய வலை, தந்து வர்த்தன: - வலையை வளரச் செய்வோன், பெருகச் செய்வோன். அல்லது பெருகிய, வளர்ந்த, நீளும் வலையே அவன் என்கிறது.

யோசித்துப் பாருங்கள் - GOD IS A WEB and that too A WEB THAT IS GOING STRONGER AND STRONGER.

ஆழ்வாருடைய பாடல் -

தன்னுள்ளே திரைத்தெழும்
தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து
அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து
நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற
நீர்மை நின்கண் நின்றதே.

(திருச்சந்தவிருத்தம்)

பீட்டர் ஸ்டெர்ரி என்பார் கூறுவார் - படைப்பு என்பது கடவுளின் முகம் போர்த்திய சலாகை. சலாகையில் அந்த முகத்தின் சாயல் படிந்துள்ளது.

ஷபிஸ்தாரி கூறுவது - புள்ளியில் இருந்து கோடு; கோட்டில் இருந்து வட்டம்; வட்டம் முடிந்தால் கடையும் முதலும் இணையும்.

ஷ்வாங்ஸீ கூறுகிறார் தாவோ பற்றி -

கடலினும் அளத்தற்கரியது
கணம் தொறும் முடிவில் தொடக்கம்
அனைத்துக்கும் அறிவீந்தும் அந்தம் அறியா நெறி
முழுமையானவரின் தாவோ
இயல்பு மங்காது திகழும் தன் இயக்கத்தில்.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*