Tuesday, January 14, 2020

எதிராஜுலு செட்டியார்


                              என்றோ   ஒருவர்  வெட்டிய  கேணி   வழிச்செல்வோர்   தாகம்  தணித்துக் கொண்டே   இருக்கும்.  யாரோ  ஒரு  மகராசன்  என்று  பொது  நன்றியாக  மாறி   தனிப்  பெயர்   மறைந்தாலும்  அந்த  நன்மை   மறைவதில்லை.  ஆனால்   தீமை  புரிபவரை   அந்தப்  படுபாவி என்று   கால  காலத்திற்கும்   தனிப் பெயராகவே    இகழ்தல்   நிலைபெறுகிறது.  ஊருண்  கேணியாக   வாழ்ந்தவர்களையும்   தனித்தனியாக   நினைவு  கொண்டு   வாழ்த்தினால்  என்ன?  வாழ்த்துவதில்  என்ன  சோம்பேறித்தனம்?
                                விசிஷ்டாத்வைத  தரிசனம்   ஸ்ரீராமானுஜர்  காலம்   தொடங்கி  எம்பெருமானார்  தரிசனம்  என்று  கொண்டாடப்பட்டது.  பின் வந்த  பெரியோர்கள்   ஸ்ரீவைஷ்ணவ  தரிசனத்தை  74  துறைகள்  கொண்ட  தொண்டனூர் ஏரி என்று  உருவகமாகச்  சொன்னார்கள்.   ஸ்ரீராமானுஜர்   தொண்டனூரில்   வெட்டிய  ஏரிக்கு   74   படித்துறைகளாம்.   அதேபோல்  74   சிம்ஹாஸனாதிபதிகள் என்னும்   ஆசாரியர்கள்   மூலம்   பரப்பப்பட்ட  ஸ்ரீவைஷ்ணவமும்  ஊருக்குப்  பொதுவில்   வைத்த ஏரியாக   உருவகித்தார்கள்.
                                திருவாய்மொழிக்கு   வ்யாக்கியானமாக  அமைந்த   பகவத் விஷயத்  தொகுதியும்   பின்  வரும்  சந்ததிக்காக  வைத்த   ஊருண்  கேணிதான்.  அதை   அச்சில் ஏற்றிய   ஆரம்பகாலத்து  அரையர்  பதிப்பு   முதலியவையும்  ஊர்ப்பொது  நீர்நிலைகளே.  1870ல்  வந்த   தெலுங்குலிபி   பதிப்பு  பகவத் விஷயம்,  15நூல்கள்   அடங்கியது  மிகப் பெரிய  ஊர்ப் பொதுக்  குளம். 1925ல்  ஸ்ரீ  சே.கிருஷ்ணமாச்சாரியாராலும்,   ஸ்ரீ வை மு  சடகோபராமானுஜாசாரியாராலும்  பதிப்பிக்கப்பட்ட   பகவத் விஷயம்   பிரஸித்தியானது.  ஊருண்  கேணியான  பதிப்பு.   இதைப்   பெற  நான்  முயன்ற  காலத்தில்,  எனது  நண்பர்   டி. ரமேஷ்   தமது   அத்தைவீட்டில்   அந்த   ஸெட்  இருப்பதாகவும்,  அத்தையிடம்  கேட்டு  பெற்றுத்   தருவதாகவும்  சொல்லி  அதன்படியே   பெற்றுத்  தந்தார்.   அந்த   ஸெட்   ஸ்ரீ  வி.  ஆர். எதிராஜுலு  செட்டியார்  அவர்களுடையது.   ஸ்ரீ  செட்டியார்  அவர்கள்   பேப்பர்  கம்பெனியில்  பெரிய  பதவியில்  இருந்தவர்.  உலகப் போர்  காலங்களில்   ஸ்ரீ அண்ணங்கராச்சாரியாருக்கு  பேப்பர்  தட்டுப்பாடு  இல்லாமல்  கவனித்துக் கொண்டவர்.    ஸ்ரீ  பகவத்  விஷயம்  காலக்ஷேப  கோஷ்டிகளை   1940,  1950  களில்   சைதாப்பேட்டை  வட்டாரங்களில்  நன்கு  நடத்தி   வைணவ  உணர்வை   வளர்த்தவர்.  என்றோ  இவர்  வாங்கிப்   பயன் படுத்திய   பகவத்  விஷயம்  நூல்  தொகுதி   இன்றும் என்  பயன் பாட்டில்   இருக்கிறதென்றால்,   அதற்குக்  காரணமான   ரமேஷின்  அத்தையை   நினைக்கவேண்டும்.   ஸ்ரீ  செட்டியார்  அவர்களது   மருமகள்  ரமேஷின்  அத்தை.  நன்மை என்னும்   ஜீவநதி  என்றும்   வற்றுவதில்லை.  ரமேஷுக்குத்தான்   பெரும்  நன்றி  உரித்தானது.  ஆனாலும்   அவருக்கு  நன்றி  சொல்லி   அந்நியப்படுத்திக்கொள்ள  என்  சுயநலம்  விடவில்லை.

மின்வெளிப் பரம்

மின்னாடும் பரவெளியில்
முன்னாடும் பரமனவன்
பின்நாடிப் பயின்றுவர
என்னாடிக் கண்ணகலக்
கிண்ணகமாய் ககனமுற
எண்ணாத வகையெல்லாம்
என்னாகத் தூறிவர
விண்ணாரும் வீதிகளில்
விரைசந்தில் விசைமுடிக்கி
விந்தை விரிநிகழாய்
வளையவரும் சொல்சொடுக்கி
திளைக்கத்தான் தீர்மானம்

மார்களித்த மகத்துவத்தில்
தைவந்த தீர்க்கத்தில்
மாசில்லா மோகத்தில்
பல்குணியாய்ப் பரமாகி
சித்தத்தின் திரையவிழ
வைகல் விடியொளியில்
ஆனின்ற தத்துவமாய்
ஆடிவரும் சித்துருவாய்
ஆவணிந்த அரனுக்கும் போட்டிக்கடை போடும்
ஐப்பசியால்
புரட்டி வரும் வாசியினை
கார் திகையா தீபமென காத்த கையால்
தயங்காத திறனில் திறக்கின்ற தெருவூடே
தட்டழுத்தித் தடை தாண்டி
தெரிகின்ற காட்சியினில்
தெரியாத விடை வேண்டி
புரிகின்ற சாலமெல்லாம் புன்கோலமாகிவிட
அறிகின்ற புலனருவி அறியாத புலமுருவி
ஆர்வத்தீ முனையுமிழும்
ஆகத்தேன் மலர்த் துளியில்
பாழ்குடித்த மிச்சமிது பக்குவமாய் வைத்திடுவீர்!
ஆழ்ந்திருக்கும் பொருளுமுண்டு அகழ்ந்து கொள வாழ்ந்திடுவீர் !!

எது தவம் ?

'தபித்தல்' 'வேகுதல்' என்ற சொல்லடியாகப் பிறந்தது தவம். மிகுந்த முயற்சியையும், சிரமத்தையும், பொறுமையையும், அதற்கெல்லாம் வேராக தொடர்ந்த ஆர்வத்தையும் சுட்டி நிற்பது தவம் என்ற சொல். நோக்கமும், திசையும், நசையும் முன்னிடு பொருளாய்க் கொண்டு முனையும் மானத வியாபாரம் தவம். இலக்கை நோக்கி வளைத்த வில் விடுத்த கணையாய் தைப்பது தவம். இனிவருங்காலம், இயலுமிக்காலம், கரந்துசெல் காலம் எனப்படு மூன்றையும் கணத்தினில் நிறுத்தி, காரண காரிய உருளையின் அச்சில், கற்பனை ஆணி கொண்டடித்திடும் கொல்லமை தவம். கணம் ஒன்றில் கட்டுண்ட முப்புரி காலம், கணக்கெடுத்தால் காட்சி கடந்த கற்பனையே என்ற கொள்கை புரிவது தவத்தின் விளைவு. தன்மயமாய் நிற்கும் ஒன்று தானடையத் தகுந்தது எது என்று தேடி தள்ளும் கோலங்கள் குவியும் களத்து மேடாகித் தோற்றுகிறது உலகம். தேடித் திரிந்த சிற்றுயிர், நாடி நயந்த நோக்கமும், அதற்கு ஆடிச் சுமந்த கோலமும், ஆதிப் புள்ளியில், தான் நின்றவாறே இயற்றும் கற்பனை என்று புரிந்து கொள்ளும் கணத்தின் அகநிலை ஞானமென்றால், புறநிலை சொல்கதுவிச்சூழா சுகமென்னும் இலக்கியத்தின் விதைப்பற்று. அந்த சொல்லொணா மர்மம் அவிழ்ந்ததில் விளைந்த ஆதி நகையில் முகிழ்த்த ஹாஸ்யத்தின் விரிவாய்ப் பெருகுவன இலக்கியங்கள். ஞானம் செயல் மடிந்து சையோகித்த மௌனம் விளைநிலமாய் முப்போகம் காண்பது கலை. ' பேசாப் பொருளைப் பேச நான்துணிந்தேன்' என்று கவி கூறுவதும் அப்பொழுதே.
படைப்பின் தத்துவத்தில் பட்டு, புறநிலையில் கொண்ட தாக்கம் மறைய, மனத்தடத்தில் மடங்கா கற்பனையில் ஒரு படைப்பே நிகழ, முத்தியும் வேண்டா முனைப்பில் ஒரு கணமே காலமாய்க் கோலம் கொள்ள, கலை விரித்த சொல்லரங்கில் வட்டாடிப் பொழுதயரும் கடைவாயின் அடைக்காயில் ஏறிய செம்மை விளக்கும் சிருஷ்டியின் மர்மம் தவத்தின் ஆணிவேர். போ போ போ வாயாட நேரமில்லை. வந்தவரை பற்றில் வை. அது போதும்.
பி.கு.
'தவம்'என்றதிருலோக சீதாராமின் பாடல் கடைவாய் மெல்ல இதோ:
கோலம் மிகுந்து ஒளிகூட்டி மயக்கமும் காட்டிஎழும்
காலம்என்றே பெருங் கற்பனைக்கே மயலாகி நின்று
சாலப் பலபல நாடகஞ் சார்ந்து சதாசிவமாய்
ஞாலத்திசை வெளியே படர்ந்தேங்கும்
உயிரினமே!!!
கூட்டிப் பெருக்கிக் கழித்து வகுத்தும் கணக்கறியாப் பாட்டில்
படுதுயராயின ஏதும் பகுத்தறியாது
ஏட்டில்பெருக்கிஎழுதியஎல்லாம்
இலக்கியமாய்ப் போட்டுவைப்போம்.
இது போதும்.
இதே நாம் புரிதவமே!

} ஒரு தவத்தின் குரல் {